கலைமாமணி விருது பெற்ற கவிஞர் காமகோடியன் காலமானார்

பல படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றிய கவிஞர் காமகோடியன் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.

Update: 2022-01-06 18:08 GMT
தமிழ் திரையிசைப் பாடலாசிரியர்களின் ஒருவரான கவிஞர் காமகோடியன் காலமானார். வயது 76. தமிழ் திரைத்துறை, இலக்கிய மேடைகளில் தன் கவிதைத்திறத்தை காட்டி அறிமுகமானவர். தமிழில் நானூறு படங்களில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். வாழ்க்கை சக்கரம், ஞானப்பறவை, மரிக்கொழுந்து, தேடி வந்த ராசா, தேவதை, சிகாமணி ரமாமணி, மௌனம் பேசியதே, திருட்டு ரயில் போன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் காதல் வலி என்ற பாடல் இப்போதும் இளைஞர்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலாகும்.

பல்வேறு விருதுகள் பெற்ற இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்துக் கௌரவித்தது. வயது முதிர்வு காரணமாகச் சென்னை தி.நகர் வீட்டில் காலமானார். மனைவி இறந்திருந்த நிலையில் ஒரே மகள் விஜயலட்சுமி வீட்டில் வசித்து வந்தார். இவரது உடல் இன்று மாலை கண்ணம்மாள் பேட்டை மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்