இலங்கை டெஸ்ட் போட்டி தொடர்; ரோகித் சர்மா கேப்டனாக அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என தெரிவித்து உள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து இந்திய அணி வீரர்கள் அஜிங்கியா ரஹானே மற்றும் சேத்தேஷ்வர் புஜாரா நீக்கப்பட்டு உள்ளனர். இந்த தொடருக்கான துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் டி20 போட்டிக்கான துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 போட்டி தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டி ஆகிய இரண்டு போட்டி தொடர்களிலும் ஷர்துல் தாக்குருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த தேர்வு குழு தலைவரான சேத்தன் சர்மா இன்று அறிவித்து உள்ளார்.