கருங்கல் அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம்

கருங்கல் அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயமானார். அவரை சக மீனவர்கள் தேடும் பணி ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2019-04-04 23:00 GMT
கருங்கல்,


கருங்கல் அருகே இனயம்சின்னத்துறை பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (வயது 41), மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த அமல்ராஜ் (61) என்பவரும் கடந்த 2 –ந் தேதி அதிகாலையில் இனயம்சின்னத்துறையில் இருந்து படகில் மீன்பிடிக்க சென்றனர். படகை நெல்சன் ஓட்டி சென்றார். அமல்ராஜ் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி.

இவர்கள் கரையில் இருந்து 14 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, படகு திடீரென நின்றது. இதனால், அதிர்ச்சியடைந்த அமல்ராஜ் திரும்பி பார்த்த போது, படகை ஓட்டிக்கொண்டிருந்த நெல்சனை காணவில்லை. அவர் கடலில் விழுந்து மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து அமல்ராஜ் அந்த வழியாக சென்ற பிற மீனவர்களிடம் சைகை காட்டி உதவிக்கு அழைத்தார். அவர்கள் அமல்ராஜை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.


இதுகுறித்து குளச்சல் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், தகவல் அறிந்த சக மீனவர்கள் படகுகளில் சென்று மாயமான மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மாயமான நெல்சனுக்கு மேரி கரோலின் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இதற்கிடையே மயமான மீனவரை தேடி கண்டுபிடிக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்