கெங்கவல்லி அருகே விபத்து: மரத்தில் கார் மோதி தொழிலாளி பலி பெண்கள் உள்பட 7 பேர் காயம்

கெங்கவல்லி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-04-12 22:15 GMT

கெங்கவல்லி, 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஒரு காரில் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர். அவர்கள் வந்த கார் சேலம் மாவட்டம் கெங்கவல்லி செட்டிகுளம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள மைல் கல்லில் எதிர்பாராத விதமாக மோதிய பின்னர் அருகில் உள்ள புளிய மரத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் காரில் வந்த முத்தையா (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இவர் சலவை தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

மேலும் காரில் வந்த தங்கமணி (45), சத்யா (32), முத்தையன் (34), விஜய் (23), கரண் (18), வித்யா (15), டிரைவர் வெங்கடேஷ் (25) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள் 7 பேரும் பெரம்பலூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கெங்கவல்லி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

இறந்த முத்தையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான முத்தையாவுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர்.

மரத்தில் கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்