தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-04-14 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனையடுத்து மூலவருக்கு தங்க கவசமும், சம்பந்த விநாயகருக்கு தங்க கவசமும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் வழக்கப்படி பால் பெருக்கு நிகழ்ச்சியும், 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கத்தை வாசித்து, இந்த ஆண்டுக்கான அருணாசலேஸ்வரர் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்தனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

நவக்கிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றியும் வழிபட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று காலையில் திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மேலும் செய்திகள்