அம்பேத்கருக்கு முழு மரியாதை அளிப்பது மோடி அரசு தான் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

அம்பேத்கருக்கு முழு மரியாதை அளிப்பது மோடி அரசு தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2019-04-14 22:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காலம் காலமாக தமிழக மக்கள் சித்திரை மாதம் 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். அதிலும் தி.மு.க.வினர் பிரச்சினை செய்து கொண்டு இருக்கின்றனர். அம்பேத்கர் மீது பிரதமர் மோடி மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பண பரிமாற்றத்துக்கு ஒரு ஆன்லைன் செயலி உருவாக்கப்பட்டது. அதற்கு பீமாராவ் அம்பேத்கரின் பெயர் சூட்டப்பட்டது. டெல்லியில் அம்பேத்கருக்கு பிரமாண்டமான நினைவிடம் கட்டப்பட்டு உள்ளது. அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்பு சட்டம்தான் எனது புனிதநூல் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் தொழில் தொடங்க பல வாய்ப்புகளை கொடுத்து உள்ளார். எல்லா விதத்திலும் அம்பேத்கருக்கு முழு மரியாதையை அளித்துக் கொண்டு இருப்பது மோடி அரசு தான்.

நாங்கள் பிரமாண்டமான கூட்டணி அமைத்து உள்ளோம். இந்த கூட்டணி இயல்பாகவே வெற்றிக் கூட்டணியாக உள்ளது. தூத்துக்குடி தொகுதியில் சிறப்பான வெற்றியை பெறுவோம். நாங்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது, பொதுமக்கள் எங்களிடம் வந்து கனிமொழி எம்.பி. தத்தெடுத்த ஸ்ரீவெங்கடேசபுரத்தில் எந்த பணியும் செய்யவில்லை. குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கோவிலுக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை, அந்த கிராமத்துக்கு எந்தவித முன்னேற்றமும் கொடுக்கவில்லை என்று தெரிவித்தனர். ஒரு கிராமத்தையே முன்னேற்றாதவர் தூத்துக்குடியை எப்படி முன்னேற்றுவார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், என்ன தைரியத்தில் தமிழிசை இங்கு வந்தார் என்று கேட்கிறார். இது என்னோட மண், நான் பிறந்து படித்து விளையாடிய மண். எனக்கு யார் தைரியம் கொடுக்க வேண்டும். இதே கேள்வியை நான் திருப்பி கேட்கிறேன். கனிமொழி என்ன தைரியத்தில் தூத்துக்குடிக்கு வந்தார்.

நேற்று டுவிட்டரில் பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு பனைமரத்தின் படத்தை வைத்து உள்ளார்கள். உங்களுக்கு ஓட்டு என்று வந்தவுடன் கொள்கை எங்கோ போய்விட்டது. ஏன் அதனை எடுத்துவிட்டு பனைமரத்தை வைத்து உள்ளர்கள். பெரியாரை தூக்கி வீசி விட்டீர்கள். பனைமரத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்.

ஆனால் நான் அந்த பனங்காட்டில்தான் வளர்ந்தேன். அந்த பதநீரை குடித்து, கிழங்கை சாப்பிட்டு வளர்ந்து உள்ளேன். நாங்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். இதே போன்று வேறு கட்சியினர் செய்து இருந்தால் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் அறிக்கை விட்டு இருப்பார்கள். வீரமணி என்ன செய்து கொண்டு இருக்கிறார். அவர் கிருஷ்ணபகவானை தவறாக பேசியதால் மக்கள் கொதித்து உள்ளனர். எனக்கு தைரியம் உள்ளது.

நான் ஏதோ தோற்பதற்காகவே இங்கு வந்து இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அப்போது, கனிமொழி மேடையில் இருந்து சிரிக்கிறார். அப்படிப்பட்ட ஏளனமான விஷயத்தை நான் செய்யமாட்டேன். எங்களை பொறுத்தவரை பலம் இருக்கிறது. எங்கள் கூட்டணி பலம் இருக்கிறது. எங்கள் திட்டங்களின் பலம் இருக்கிறது. அதனால் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்