இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8–ந்தேதி மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும், அதில் இருந்த கனிஸ்டன், முருகேசன், முனியசாமி உள்பட 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் நேற்று வழக்கு விசாரணைக்காக ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நல்லெண்ண அடிப்படையில் இந்த 4 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும் படகின் உரிமையாளர் வருகிற ஜூன் 7–ந்தேதி உரிய ஆவணங்களுடன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும், அவ்வாறு ஆஜராக தவறினால் சம்பந்தப்பட்ட படகு அரசுடைமையாக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தற்போது விடுதலை செய்யப்பட்ட 4 மீனவர்கள் உள்பட 26 பேர் இலங்கையில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளின் பராமரிப்பில் உள்ளனர். இதுதவிர ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்களும், காரைக்காலை சேர்ந்த 18 மீனவர்களும் என மொத்தம் 30 பேர் இலங்கை சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.