திருப்பைஞ்சீலியில் நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடக்கிறது

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடக்கிறது.

Update: 2019-04-17 22:30 GMT
சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை பல்லக்கிலும் இரவில் சிம்ம வாகனம், கிளி வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் ஆகிய வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் 6-ம் நாளான கடந்த திங்கட்கிழமை சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு கைலாச வாகனம், அன்ன வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

தேரோட்டம்

நேற்று இரவு சுவாமி தங்க குதிரை வாகனம், அம்பாள் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து வையாளி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேே-்ராட்டம் இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி மேற்பார்வையில் கோவில் செயல் அலுவலர் ஹேமலதா மற்றும் கிராம பட்டயதாரர்கள், பணியாளர்கள் செய்து உள்ளனர்.

நாளை(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தேர்கால் பார்த்தல், நடராஜர் புறப்பாடு, தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவில் கேடயத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. நாளை மறுநாள்(சனிக்கிழமை) இரவு முத்து பல்லக்கும், 21-ந் தேதி இரவு 7 மணிக்கு பஞ்சபிரகாரம் விழாவும் நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்