ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2019-05-17 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டசபை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஈரோடு அருகே உள்ள சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 23–ந் தேதி ஓட்டுகள் எண்ணும் பணி நடக்கிறது.

இதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டு அதில் 3 பணியாளர்கள் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளனர். இந்த பணியில் 252 பேரும், நுண் பார்வையாளர்கள் 84 பேரும் என 336 பேர் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளனர். மேலும் கூடுதலாக 54 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் இருப்பார்கள்.

இந்த நிலையில் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுவோர் மற்றும் நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 390 பேருக்கு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தேர்தல் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு உள்ள அடையாள அட்டையுடன், ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடுவோர் வருகிற 22–ந்தேதி மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ள சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரிக்கு வரவேண்டும். அங்கு அவர்கள் ஓட்டு எண்ணும் தொகுதி விபரம், குலுக்கல் முறையில் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும்.

ஓட்டு எண்ணிக்கை நாளான 23–ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கல்லூரி நுழைவு வாயில் பகுதிக்கு வரவேண்டும். அங்கிருந்து பஸ் மூலம் ஓட்டு எண்ணும் மையத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். வாகனங்களில் வருபவர்கள் எதிரே உள்ள வாசவி கல்லூரியில், வாகனத்தை நிறுத்திவிட்டு வர வேண்டும்.

தேர்தல் ஆணைய அடையாள அட்டை இல்லாதவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஓட்டு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டு மற்றும் விவிபேட் கருவிகளில் உள்ள சீட்டுகள் வேட்பாளர் வாரியாக பிரித்து, அவற்றை எண்ணிவிட்டு தலா 25 ஆக கட்டிப்போட வேண்டும்.

ஒவ்வொரு மேஜையிலும் ஓட்டு எண்ணிக்கையின் போது, ஓட்டு எண்ணும் அலுவலர் காண்பிக்கும் எண்ணிக்கையை, ஓட்டு எண்ணிக்கை அலுவலர், முகவர், நுண் பார்வையாளர் ஆகியோர் குறித்து ஒட்டு மொத்தமாக சரியாக உள்ளதா? என்பதை தெரிவிக்க வேண்டும். அதன் பின்னரே அடுத்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் எண்ணப்பட வேண்டும்.

ஓட்டு எண்ணும் மைய வளாகத்திற்குள் செல்போன், வாகனம் கொண்டு வர அனுமதி இல்லை. மருந்து, மாத்திரை போன்றவை எடுத்து வரலாம். இந்த மையத்தில் பங்கேற்போர், அதிகாலையில் வருவதால் அவர்களது உடல் பரிசோதனை செய்து கொள்ள டாக்டர் குழு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஓட்டுகளும் எண்ணி முடிக்கப்பட்ட பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்