வாலிபரை மது பாட்டிலால் தாக்கி செல்போன்கள் பறிப்பு - 4 பேர் கும்பல் கைவரிசை

திருப்பூரில் பட்டப்பகலில் வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் மது பாட்டிலால் தாக்கி பணம் மற்றும் செல்போன்களை துணிகரமாக பறித்து சென்றது.

Update: 2019-08-13 22:26 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த கருவலூர் காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 34). இவர் நேற்று முன்தினம் மதியம் அவருடைய நண்பரை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் கஞ்சம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள மறைவான இடத்தில் சிறுநீர் கழிப்பதற்காக பத்மநாபன் மோட்டார்சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் அவர் அருகே வந்தது. பின்னர் அவர்கள் பத்மநாபனிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை கேட்டு மிரட்டியது. அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் மதுபாட்டிலால் அவரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ.1000-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதில் காயமடைந்த பத்மநாபனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் பட்டப்பகலில் வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் பிராந்தி பாட்டிலால் தாக்கி பணம், செல்போன்களை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்