படிப்பை தொடர விருப்பம் இல்லாததால் குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை

படிப்பை தொடர விருப்பம் இல்லாததால் குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-14 23:30 GMT
மங்கலம்,

மங்கலத்தை அடுத்த நீலிபிரிவு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது47). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (40). இவர்களுடைய மகன் சுரேஷ் ராஜன் (19), மகள் தீபிகாராணி (18). இதில் சுரேஷ்ராஜன் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் சுரேஷ்ராஜன் தனக்கு படிப்பை தொடர விருப்பம் இல்லை என்றும், வேறு கல்லூரியில் சேர்த்து விடுமாறும் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து சுரேஷ்ராஜனுக்கு அவருடைய தந்தை அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்ட சுரேஷ்ராஜன் கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சுரேஷ்ராஜனை அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் சாமளாபுரம் குளம் அருகே நிற்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுரேஷ்ராஜனின் பெற்றோர் அங்கு சென்று மோட்டார் சைக்கிளை எடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் சாமளாபுரம் குளத்தில் சுரேஷ்ராஜனின் உடல் மிதப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று சுரேஷ்ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கல்லூரியில் படிப்பை தொடர விருப்பம் இல்லாத மாணவன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்