14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் பணிமனை அருகே போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-11-12 22:45 GMT
சென்னை,

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் பணிமனை அருகே போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச. பொருளாளர் கி.நடராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.ஏ. உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கி.நடராஜன் பேசியதாவது:-

தமிழக அரசு போக்குவரத்துத்துறை விரைவில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கிட வேண்டும். அதற்கு முன்பாக கடந்த கால பேச்சுவார்த்தை வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றி தரவேண்டும். 16 மாத டி.ஏ. அரியர்ஸ் தொகையை வழங்கவேண்டும். 2016 முதல் நியமனம் செய்யப்படாத 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். போக்குவரத்து கழகத்தில் உள்ள 70 சதவீத பஸ்கள் வயது கடந்த பஸ்களாக உள்ளன. இதனை சீரமைத்து தருவது அரசின் பொறுப்பு. இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். வருகிற 21-ந்தேதி தொழிலாளர் துறை அலுவலகத்தில் ஊழியர்கள் பெருந்திரளாக சென்று முறையீடு செய்யவும் முடிவெடுத்து இதிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்