பாவூர்சத்திரம் அருகே, நர்சு பாலியல் பலாத்காரம்; வியாபாரிக்கு ஆயுள் தண்டனை - நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பாவூர்சத்திரம் அருகே நர்சை பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-11-14 22:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 34), பால் வியாபாரி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு இவர் திருமண வயதை எட்டாத நர்சை 2-வதாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கினார். பின்னர் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி இந்திராணி வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட நர்சுக்கு ரூ.1 லட்சமும், காப்பகத்தில் வளர்ந்து வரும் அவரது குழந்தைக்கு ரூ.1 லட்சமும் ரவிச்சந்திரன் வழங்க உத்தரவிட்டார். இதுதவிர மாவட்ட நிர்வாகம் அந்த குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் ரூ.2 லட்சம் முதலீடு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு வக்கீலாக பால்கனி ஆஜரானார்.

மேலும் செய்திகள்