விளையாடியபோது பரிதாபம், துப்பட்டா கழுத்தை இறுக்கி சிறுவன் சாவு

துப்பட்டாவை கட்டி விளையாடியபோது, கழுத்து இறுகி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-12-04 22:30 GMT
கோவை,

கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்தவர் சதக்கத்துல்லா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் காஜா உசேன் (வயது 10). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை வீட்டில் இருந்த காஜா உசேன், தன்னுடைய அக்காளின் சுடிதார் துப்பட்டாவை ஜன்னலில் கட்டினான். பின்னர் கட்டிலில் இருந்து ஊஞ்சல் போல் தொங்கிக்கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிலில் இருந்து கீழே விழுந்தான்.

துப்பட்டா கழுத்தில் இறுக்கியது. இதில் மூச்சுத்திணறி சிறுவன் மயங்கினான். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த காஜா உசேனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு காஜா உசேனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்க செய்தது.இந்த சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்