"தமிழக மக்களை அவமதிக்கும் செயல்" - மத்திய அரசுக்கு முத்தரசன் கண்டனம்

தமிழக அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்

Update: 2024-04-28 14:29 GMT

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தையும், மக்களையும் வஞ்சித்து வருகின்றது.  தமிழ்நாடு இயற்கை பேரிடர் தாக்குதலால் பேரிழப்பை சந்தித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்த நேரத்தில் கரம் நீட்டி உதவாமல் உதாசினப்படுத்தி, அவதூறு பரப்பு அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செலில் ஈடுபட்டதை தமிழக மக்கள் ஒரு போதும் மறந்து விட மாட்டார்கள்.

மிக்ஜம் புயலும், பெருமழையும் தாக்குதல் நடத்தியது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாத்து, மறுவாழ்வுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரூ2,477 கோடி செலவு செய்துவிட்ட நிலையிலும் மோடியின் பாஜக மத்திய அரசு இரக்கம் காட்ட முன் வரவில்லை. ரூ. 37 ஆயிரத்து 907 கோடி பேரிடர் கால சேதாரங்களை சீர்படுத்த தேவை என்ற கோரிக்கையை மத்திய அரசு அலட்சியம் செய்த நிலையில் தமிழக அரசு உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

உச்ச நீதிமன்றம் தலையிடும் சூழலில் மத்திய அரசு மிக, மிக குறைவான சிறு தொகைக்கு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தையும், மக்களையும் அவமதிக்கும் செயலாகும். பாஜக மத்திய அரசின் பாரபட்சம் காட்டி, பழிவாங்கும் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக தமிழக அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது", என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்