புதுக்கடை அருகே பரிதாபம் வழக்கை வாபஸ் பெற மிரட்டியதால் பிளஸ்-2 மாணவன் தற்கொலை

புதுக்கடை அருகே சொத்து வழக்கை வாபஸ் பெற மிரட்டியதால் பிளஸ்-2 மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-05 22:15 GMT
புதுக்கடை,

புதுக்கடை அருகே பனைநின்றவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங்(வயது 52). இவருடைய மனைவி முத்துமலர் (50). இவர்களுக்கு ஜெபின் (18) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். ஜெபின், முன்சிறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

ஜெயசிங்கின் குடும்ப சொத்து சம்பந்தமாக உறவினர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பான வழக்கு குழித்துறை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை வாபஸ் வாங்கும்படி பலர் ஜெபினை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ெஜபின் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

தற்கொலை

சம்பவத்தன்று ஜெபின், வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக குழித்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை ஜெபின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஜெபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பிளஸ்-2 மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்