சிவன் சிலை மீது பாம்புகள் படம் எடுத்து நின்றதால் பரபரப்பு

பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில் நுழைவுவாயில் மண்டபத்தில் சிவன் சிலை மீது பாம்புகள் படம் எடுத்து நின்றதால் பரபரப்பு.

Update: 2020-01-04 23:00 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன் கொட்டாய் கிராமத்தில் பழமை வாய்ந்த பால்வண்ணநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. இந்த கோவிலின் நுழைவுவாயில் பாலக்கோடு போலீஸ் நிலையம் எதிரில் 20 அடி உயரத்தில் மண்டபம் அமைக்கப்பட்டு, அதன் மேல் 15 அடி உயரத்தில் சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வெள்ளை துணியால் சுற்றப்பட்டு சாமி கண் திறப்பிற்காக மூடி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை நுழைவு வாயில் மண்டபத்தில் உள்ள சிவன் சிலை மீது 2 நாக பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டு படமெடுத்து ஆடிக்கொண்டு இருந்தது. இதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் பாம்புகள் சிலையை மூடி வைக்கப்பட்ட வெள்ளை துணிக்குள் புகுந்து மறைந்து விட்டது. சிவன் சிலை மீதுபாம்புகள் இருந்ததை காண பொதுமக்கள் திரண்டதால் பாலக்கோடு-ஓசூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்தை பைபாஸ் புறவழி சாலையில் போலீசார் திருப்பி விட்டனர். பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மண்டபத்தின் மீது ஏறி பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் பாம்புகள் கிடைக்கவில்லை. கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் கோவில் நுழைவுவாயில் மண்டபத்தில் உள்ள சிவன் சிலை மீது பாம்புகள் பின்னி பிணைந்து இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்