கல்லூரி மாணவி தவறவிட்ட செல்போனில் இருந்து 30 பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல் - நெல்லை வாலிபர் கைது

கல்லூரி மாணவி தவறவிட்ட செல்போனில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல் விடுத்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-10 23:00 GMT
நாட்டறம்பள்ளி,

நெல்லை மாவட்டம், ஜடையான் தலைவன்கோட்டை முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 24). இவர், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கல்லூரி மாணவி ஒருவர் தவறவிட்ட செல்போனை வைத்து, அந்த போனில் உள்ள எண்களுக்கு பெண் குரலில் பேசி உள்ளார்.

மேலும் ஆபாச படங்களை கல்லூரி மாணவிகளுக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். அதேபோல நாட்டறம்பள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ஆபாசவார்த்தை பேசி, ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமாரிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின்பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் வினோத்தை போலீசார் பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாசமாக பேசியதும், ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பியதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் வினோத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்