சிங்கப்பெருமாள் கோவில் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-02-29 22:30 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஜீவா நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அந்த பகுதி மக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தனர். அங்கு ஒரு வாலிபரின் உடல் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் தூக்கில் அழுகிய நிலையில் காணப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் இறந்த நபர் ஆண்டனி ஸ்டீபன்ராஜ் (வயது 19) என்பதும், இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. அவரது தாய் ஏற்கனவே இறந்து விட்டார். தந்தை அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் வீட்டில் சமையல் செய்ய ஆள் இல்லாத காரணத்தால் ஓட்டல்களில் தினமும் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இதன் காரணமாக இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்