பிளஸ்-1 தேர்வு தொடங்கியது: 10,413 மாணவ- மாணவிகள் எழுதினர் 583 பேர் வரவில்லை

கரூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-1 தேர்வை 10,413 மாணவ-மாணவிகள் எழுதினர். 583 பேர் எழுத வரவில்லை.

Update: 2020-03-04 22:30 GMT
கரூர்,

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தேர்வுக்காக மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. காலை 8 மணி முதலே மாணவ, மாணவிகள் தேர்வு மையத்துக்கு வந்து, படித்த பாடங்களை கடைசியாக திருப்பி பார்த்து கொண்டிருந்தனர். பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களை பரிசாக வழங்கி வாழ்த்தியதை காண முடிந்தது. மேலும் தமிழ், அரபிக், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிப்பாடத்திற்கான தேர்வு என்பதால் மாணவர்கள் பதற்றமின்றி இருந்தனர். காலை 9.30 மணியளவில் அனைத்து தேர்வு மையங்களிலும் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அப்போது, தேர்வறையில் துண்டு சீட்டு வைத்திருத்தல், செல்போன் பயன்படுத்துதல், வினாத்தாள்-விடைத்தாள் மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் படிப்பதற்கு தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் தேர்வறையில் கடைபிடிக்க வேண்டியவை உள்ளிட்டவை பற்றி மாணவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தேர்வு சம்பந்தமான புகார்களை தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு மையத்திலும் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

10,413 பேர் எழுதினர்

காலை 10 மணியளவில் தேர்வறைக்குள் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாள், விடைத்தாள் வழங்கப்பட்டது. வினாக்களை வாசிப்பது, விடைத்தாளில் விவரங்களை சரிபார்ப்பது உள்ளிட்டவற்றுக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. பின்னர் 10.15 மணியளவில் ஆர்வத்துடன் மாணவர்கள் தேர்வெழுத ஆரம்பித்தனர். தேர்வு தொடங்கியதும், மையத்தினுள்ளே வெளிநபர்கள் யாரும் புகுந்து விடாத வகையில், நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி, மாவட்ட கல்வி அதிகாரிகள் சிவராமன், கபீர் உள்ளிட்டோர் சில தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்களின் வருகை குறித்து கேட்டறிந்தனர். கரூர் மாவட்டத்தில் 5,395 மாணவர்கள், 5,601 மாணவிகள் என மொத்தம் 10,996 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 5,014 மாணவர்கள், 5,399 மாணவிகள் என மொத்தம் 10,413 பேர் கலந்து கொண்டு மொழிப்பாட தேர்வினை எழுதினார்கள். 381 மாணவர்கள், 202 மாணவிகள் என மொத்தம் 583 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

தேர்வில் முறைகேடுகளை களைவதற்காக 5 குழுக்களில் 107 ஆசிரியர்கள் அடங்கிய பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வறையை சுற்றி சுற்றி வந்து, காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல் உள்ளிட்டவற்றில் யாரேனும் ஈடுபடுகின்றனரா? என தீவிரமாக கண்காணித்தனர். தேர்வு பணிக்காக கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,065 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்வானது சரியாக மதியம் 1.15 மணியளவில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து விடைத்தாளை தேர்வறை கண்காணிப்பாளரிடம் மாணவர்கள் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தனர். பின்னர் தேர்வில் தங்களுக்கு எழுந்த சந்தேகங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

அடிப்படை வசதிகள்

அனைத்து தேர்வு மையங்களிலும், தேர்வெழுத வரும் மாணவ-மாணவிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களுக்கு எளிதில் வந்துசெல்ல போதிய பஸ்வசதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கென சில மையங்களில் தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் ஆசிரிய, ஆசிரியைகள் உதவியுடன் தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிலருக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். அவர்களுக்கு மதியம் 2.15 மணிக்கு தேர்வு நிறைவடைந்தது. 

மேலும் செய்திகள்