தேவகவுடா பேரனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்; காங்சிரசை சாடிய அமித்ஷா

நாட்டில் பெண் சக்திக்கு ஆதரவாக துணை நிற்போம் என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று காலை கூறியுள்ளார்.

Update: 2024-04-30 07:00 GMT

கவுகாத்தி,

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான இவர், நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் சகோதரரின் மகன் பிரஜ்வால் ரேவண்ணா ஆவார். இந்நிலையில், இவருக்கு எதிராக வீடியோவுடன் கூடிய பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹாசன் நகர் முழுவதும் பரவி வரும் அந்த வீடியோவில், பல பெண்களை கட்டாயப்படுத்தி அல்லது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் சில காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இதுபற்றி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கர்நாடக மாநில மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தது. இந்நிலையில், சித்தராமையா தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில், பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஹாசன் மாவட்டத்தில் ஆபாச வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. அதில், பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர் என தெரிகிறது. இந்த சூழலில், இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வலியுறுத்தி, கர்நாடக மாநில மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை அரசுக்கு எழுதியுள்ளது. அவர்களுடைய வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த முடிவானது எடுக்கப்பட்டு உள்ளது என்று பதிவிட்டு உள்ளார்.

இந்நிலையில், ரேவண்ணா ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்று விட்டார் என தகவல் வெளியானது. பா.ஜ.க.வுடன், மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியில் உள்ளது. இந்த சூழலில், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் இந்த விவகாரத்தில் ஆளும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஹாசன் பகுதியிலுள்ள ஏதோவொரு தலைவர் மீது கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. இவற்றுக்கு கர்நாடக பா.ஜ.க. தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் பலர் பதிலளிக்க வேண்டும் என்றார்.

ஜே.டி.எஸ். (மதசார்பற்ற ஜனதாதள கட்சி) கட்சியின் நன்மதிப்பை கெடுக்க மகளிர் ஆணையம் முயற்சிக்கிறது என அவர்கள் கூறி வருகின்றனர் என்ற செய்திகளை படித்தேன். அந்த ஆணையம், முதல்-மந்திரி மற்றும் உள்துறை மந்திரிக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளது என கூறியுள்ளார்.

இந்த வழக்குடன் டி.கே. சிவக்குமாருக்கு மறைமுக தொடர்பு உள்ளது என முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டு கூறிய நிலையில், அதற்கு பதிலளித்த டி.கே. சிவக்குமார், என்னுடைய பெயரை அவர் வெளியே கூறட்டும். அவரை நான் வெளிப்படுத்துவேன். இப்படியெல்லாம் பேசி, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை அவர் நியாயப்படுத்துகிறாரா? என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்களிடம் இன்று காலை பேசும்போது, நாட்டில் பெண் சக்திக்கு ஆதரவாக துணை நிற்போம் என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. காங்கிரசிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். கர்நாடகாவில் யாருடைய ஆட்சி நடைபெறுகிறது? காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

இந்த விசயத்தில் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை. இது கர்நாடகாவின் சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய விவகாரம் ஆகும். காங்கிரஸ் அரசே இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

இந்த விவகாரத்தில், விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றே பா.ஜ.க. விரும்புகிறது என தெரிவித்த அமித்ஷா, அவர்களுடைய கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டம் ஒன்றை நடத்தி ஒரு முடிவை எடுக்க போகிறோம் என கூறியுள்ளனர் என சுட்டி காட்டினார்.

இது மிக தீவிரம் வாய்ந்த விசயம். நாங்கள் இதனை சகித்து கொள்ள முடியாது. அதிகாரத்தில் இருந்தபோதும் ஏன் காங்கிரஸ் அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என நாங்கள் கேட்க விரும்புகிறோம்? பிரியங்கா காந்தி, அவர்களுடைய முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி ஆகியோரிடம் இதுபற்றி கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்