பேராசிரியர்களை கைது செய்யக்கோரி தற்கொலை செய்த கல்லூரி மாணவனின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு

பேராசிரியர்களை கைது செய்யக்கோரி தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவனின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

Update: 2020-03-12 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை விளார் சாலையில் உள்ள அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்தவர் முகமதுஹனீபா. இவருடைய மகன் மீராமைதீன் (வயது21). இவர் தஞ்சையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2-ந்தேதி மாணவிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தார்.

இதைப்பார்த்த பேராசிரியை, மீரா மைதீனை கண்டித்துள்ளார். மேலும் வகுப்பறையில் அவரை மட்டும் தனியாக அமரவைத்ததாக கூறப்படுகிறது. துறை தலைவரும் மீரா மைதீனை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் எலி பேஸ்டை (வி‌‌ஷம்) வாங்கி கல்லூரி மைதானத்தில் அமர்ந்து தின்றார்.

இதையடுத்து அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மீரா மைதீன் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் மாணவனின் உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு மாணவனை திட்டிய பேராசிரியை, துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழ்ப்பல் கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் பேராசிரியை சங்கீதா, துறைத்தலைவர் மகே‌‌ஷ் ஆகியோர் மீது மாணவரை திட்டி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

பெற்றோர் மறுப்பு

இந்த நிலையில் நேற்று காலை மாணவனின் பெற்றோர் மற்றும் சக மாணவர்கள், மீரா மைதீன் உடல் வைக்கப்பட்டு இருந்த பிரேத அறை முன்பு திரண்டனர். அப்போது அவர்கள், பேராசிரியை சங்கீதா, துறைத்தலைவர் மகே‌‌ஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து மீராமைதீனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மதியம் 2 மணிக்கு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்