ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் 50 சதவீதம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது; அமைச்சர் காமராஜ் பேட்டி

ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் 50 சதவீதம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது என திருவாரூரில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2020-06-08 03:52 GMT
திருவாரூர்,

திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சி கூட்டுறவு நகரில் ரூ.17 லட்சத்து 64 ஆயிரம் மதி்ப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். செல்வராசு எம்.பி. முன்னிலை வகித்தார். முன்னதாக கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் வரவேற்றார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று இருந்து வரும் நிலையில் தேவையான பணிகள் அந்தந்த நேரங்களில் நடைபெற வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் கட்ட வேண்டிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டும் பணிகளும், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைக்கின்ற பணியும் சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபெற்றுள்ளது.

ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் கடந்த 3 மாதங்களாக முதல்-அமைச்சர் அறிவிப்்பின்படி ரேஷன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டது. இதில் நடப்பு ஜூன் மாதத்திற்கு இதுவரை 50 சதவீதம் விலையில்லா பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொருட்கள் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்். 8 வழிச்சாலை திட்ட பணிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பணிகள் நடைபெறும்.

நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று இருப்பதாக வரும் செய்தி உண்மையில்லை. தூர்வாருதல், சிறப்பு தூர்வாருதல் மற்றும் குடிமராமத்து பணிகள் என அனைத்து பணிகளும் தண்ணீர் வருவதற்குள் முழுமையாக முடிக்கப்படும். குறுவை சாகுபடிக்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்து இருப்பில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) மணிவண்ணன், உதவி கலெக்டர் ஜெயப்பிரீத்தா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சுந்தரலிங்கம், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி செல்வம், ஊராட்சி செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்