மாவட்டம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின

தர்மபுரி மாவட்டம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

Update: 2020-07-13 08:56 GMT
தர்மபுரி,

கொரோனா வைரசை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்த வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த முழு ஊரடங்குகளில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளும் அனுமதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. ஜூலை மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடித்தனர். தளர்வுகள் இல்லாத இந்த முழு ஊரடங்கின்போது போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சேலம்-பெங்களூரு 4 வழிச்சாலை, அதியமான்கோட்டை-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, மஞ்சவாடி-வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் போக்குவரத்து இன்றி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தது.

தர்மபுரி நகரில் முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடித்தனர். யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினர். காலை நேரத்தில் ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பினர். தர்மபுரி நகரில் பஸ் நிலையங்களை சுற்றி உள்ள சாலைகளான நேதாஜி பைபாஸ் ரோடு, ஆறுமுக ஆசாரி தெரு, சின்னசாமிநாயுடு தெரு, முகமது அலி கிளப்ரோடு, பென்னாகரம் ரோடு, ராஜகோபால் கவுண்டர் தெரு, நாச்சியப்பகவுண்டர் தெரு மற்றும் 4 ரோடு, கடைவீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

இந்த முழு ஊரடங்கால் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடந்தது. நகரில் ஒரு சில இடங்களில் காலை நேரத்தில் பொதுமக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதேபோன்று பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, ஏரியூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மொரப்பூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் போக்குவரத்து இன்றி அனைத்து கிராம சாலைகளும் வெறிச்சோடி கிடந்தது.

மேலும் செய்திகள்