அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம் வினியோகம்

தேனி மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

Update: 2020-07-16 02:52 GMT
தேனி,

தேனி மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதையொட்டி பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முடித்து 10-ம் வகுப்பு செல்லும் மாணவ, மாணவிகள், பிளஸ்-1 தேர்ச்சி பெற்று பிளஸ்-2 படிக்க உள்ள மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளியில் வழங்கப்பட்டது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தும் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் பணியில் ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபட்டனர். அதன்படி தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களை வினியோகம் செய்தனர். அந்த வகையில் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 13 ஆயிரத்து 950 மாணவ, மாணவிகளுக்கு, மொத்தம் 69 ஆயிரத்து 750 புத்தகங்களும், பிளஸ்-2 படிக்கும் 11 ஆயிரத்து 145 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 67 ஆயிரத்து 700 புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. ஓரிரு நாட்களில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும் செய்திகள்