திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு த.மு.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு த.மு.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2020-07-17 00:46 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு கிடைக்க தாமதம் ஆனதால், அடக்கம் செய்வதற்கு பெண்ணின் உடல் வழங்கப்பட்டது. இதற்காக கொரோனாவால் இறந்தவரின் உடலை போன்று பாலித்தீன் பையால் கட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. கொரோனா அச்சத்தால் உறவினர்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே இறந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இது பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதனால் சாதாரண நோயாளிகளையும் கொரோனா பாதித்தவர்கள் போன்று நடத்துவதாக கூறி, திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொருளாளர் நஜிபுர்ரகுமான் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சேக்பரீத் முன்னிலை வகித்தார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தாக், நகர தலைவர் இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சாதாரண நோயாளிகளை, கொரோனா பாதித்தவர்கள் போன்று நடத்தக்கூடாது. கடுமையான உடல்நலக்குறைவுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு முதலில் சிகிச்சை அளித்து விட்டு, கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்து நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்