பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: கோவையில் 96.39 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதில் கோவை மாவட்டத்தில் 96.39 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் கோவை மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தது.

Update: 2020-07-17 03:54 GMT
கோவை,

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் 81 அரசுப்பள்ளிகள் உள்பட மொத்தம் 353 பள்ளிகளில் இருந்து 14 ஆயிரத்து 536 மாணவர்களும், 18 ஆயிரத்து 338 மாணவிகளும் என மொத்தம் 32 ஆயிரத்து 874 பேர் இந்த தேர்வை எழுதினர். கொரோனா தொற்று காரணமாக பிளஸ்-2 இறுதிதேர்வை கோவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் எழுதவில்லை. இதனால் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று காலை 9 மணி யளவில் திடீரென தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்ச்சி முடிவுகள் குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில அளவில் 3-வது இடம்

கோவை மாவட்டத்தில் 96.39 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் மூலம் மாநில அளவில் கோவை மாவட்டம் 3-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 95.01 சதவீதம் தேர்ச்சி பெற்று, 4-வது இடத்தை பெற்று இருந்தது. இந்த ஆண்டு 1.38 சதவீதம் தேர்ச்சி பெற்று 3-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்து உள்ளது.

இதற்காக உழைத்த அனைத்து ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அடுத்த ஆண்டும் மேலும் கோவை மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செல்போன் மூலம் பார்த்தனர்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டாலும், கொரோனா பாதிப்பு காரணமாக ஏராளமான மாணவ-மாணவிகள் நேற்று பள்ளிகளுக்கு வரவில்லை. தேர்ச்சி முடிவுகள் செல்போனில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அனுப்பப்பட்டன. வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் இணையதளம் மூலம் தங்களின் மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொண்டனர். ஆண்டுதோறும் தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே முதலிடம் பெற்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் மாணவர்கள் 94.98 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 97.50 சதவீத தேர்ச்சியும் பெற்றனர். இதன் மூலம் இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே முதலிடம் பிடித்தனர்.

மேலும் செய்திகள்