பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு, தனது 2 குழந்தைகளுடன் வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2020-07-18 01:27 GMT
பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் அம்ஜத் உசேன் (வயது 35). இவர், அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி தஸ்லிமா. இந்த தம்பதிக்கு இசாஜ் அகமது (4), இத்ரிஸ் (1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் கணவரை பிரிந்து உடுமலைபேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு தஸ்லிமா சென்று விட்டார். மேலும் உடுமலைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அம்ஜத் உசேன் மீது அவர் புகார் அளித்துள்ளார். இதேபோல் தஸ்லிமா மீது பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் அம்ஜத் உசேன் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த போலீஸ் நிலையங்களில் விசாரணை நடந்து வருகிறது.

தீக்குளிக்க முயற்சி

இதற்கிடையே பழனி தாலுகா போலீசார், ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக அம்ஜத் உசேன் புகார் கூறினார். இது தொடர்பாக போலீசார் மீது புகார் கொடுப்பதற்காக, பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தனது 2 குழந்தைகளுடன் அம்ஜத் உசேன் நேற்று வந்தார்.

திடீரென அவர், தான் கொண்டு வந்த பையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது குழந்தைகள் மீதும், தன்மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை மடக்கி பிடித்து தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் அருகே உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து பெண் போலீசார் ஓடி வந்து 2 குழந்தைகளையும் மீட்டனர்.

பின்னர் குழந்தைகளின் உடலில் தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். இதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு வேறு உடைகளை அணிவித்தனர். இந்தநிலையில் அம்ஜத் உசேன் பழனி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அம்ஜத் உசேனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்