சரத்பவார் மீது சிபிஐ நடவடிக்கை கோரி அன்னா ஹசாரே மனு: உயர் நீதிமன்றம் மறுப்பு

சர்க்கரை ஆலைகளில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற அன்னா ஹசாரவின் கோரிக்கையை ஏற்க மும்பை உயர் நீதிமன்ற மறுத்துவிட்டது.

Update: 2017-01-06 15:46 GMT
மும்பை, 

மகாராஷ்டிரா மாநிலத்தில் சர்க்கரை ஆலைகளில் நடைபெற்ற முறைகேடுகளால்  ரூ.25,000 கோடி அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இம்முறைகேட்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது உறவினர் அஜித்பவார் ஆகியோர் மீது சி.பி.ஐ விசாரணை கோரி, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கை பொறுத்தமட்டில் இந்த தருணத்தில், எங்களால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது. போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்படாமலேயே, நீங்கள் சி.பி.ஐ. விசாரணை கோருகிறீர்கள். வழக்குப்பதிவு செய்யப்படாத பட்சத்தில், வழக்கை மாற்ற கோரி உங்களால் எப்படி கேட்க முடியும்.

ஆகையால், இந்த குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு மனுதாரர் முதலில் போலீசில் புகார் செய்யட்டும். போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுப்பு தெரிவித்தால், உயர் அதிகாரிகளை அணுகலாம். அதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால், எங்களிடம் வரலாம்.இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, போலீசில் புகார் தெரிவிக்க சற்று கால அவகாசம் அளிக்குமாறு அன்னா ஹசாரே வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 13–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்