கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையை வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதரிக்கின்றனர் - பிரதமர் மோடி

ஊழல் நமது அரசியலமைப்பு முறையை அழிக்கும் சக்தியாக திகழ்கிறது. எனவே கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

Update: 2017-01-08 07:58 GMT


கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையை வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதரிக்கின்றனர் என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு நடந்து வருகிறது. போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கலந்துக் கொண்ட மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையை வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதரிக்கின்றனர் என்றார்.  

பிரதமர் மோடி பேசுகையில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மதிக்கும் இந்தியாவை பெருமைப்படுத்தும் வகையில் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இந்தியர்கள் அதிகளவில் வசிப்பதால் மதிக்கப்படவில்லை. அவர்களின் சேவைக்காகவும், பங்களிப்புக்காகவுமே மதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், சிறந்த இந்திய கலாசாரம், பண்பாடுகள் மற்றும் மாண்புகளை பரப்புகின்றனர். வெளிநாடுகளில் 3.9 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்தியர்கள் தடம் பதித்துள்ளனர். 

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ரூ. 4.7 லட்சம் கோடி பணத்தை அனுப்புகின்றனர். இதன் மூலம் இந்திய பொருளாதாரம் வளர்கிறது. அவர்கள் அனுப்பும் பணத்தால் இந்தியாவில் பல வளர்ச்சி திட்ட பணிகள் செயல் படுத்தப்படுகின்றன. எனவே நாட்டின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண தூதரகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஊழல் மற்றும் கருப்பு பணம்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. 

ஊழல் நமது அரசியலமைப்பு முறையை அழிக்கும் சக்தியாக திகழ்கிறது. எனவே கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த நடவடிக்கைக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கும் உறுதுணையாக உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்