துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: முதல்வர்
துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து இன்று மத்திய அமைச்சர்களையும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் மத்திய சாலைப்போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:- மத்திய மாநில அரசுகள் இணைந்து துறைமுகம்–மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. துறைமுகம்–மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார். மேலும், தமிழகத்தில் 800 கி.மீ.சாலைகளை தேசிய சாலைகளாக தரம் உயர்த்த மத்திய அரசிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியாதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை முதல் அமைச்சர் சந்தித்து பேசினார். இதன்பிறகு ரவி சங்கர் பிரசாத்தையும் சந்தித்து பேசுகிறார். பின்னர், இரவு 7 மணியளவில் விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.