ஓரினச்சேர்க்கை இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டி ஆசிரியரிடம் ரூ.31 லட்சம் பணம் – பொருட்கள் பறிப்பு

ஓரினச்சேர்க்கை இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டி அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.31 லட்சம் மதிப்பிலான பணம்–பொருட்கள் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-08 22:06 GMT

பெங்களூரு,

பெங்களூருவில், ஓரினச்சேர்க்கை இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டி அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.31 லட்சம் மதிப்பிலான பணம்–பொருட்கள் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

அரசு பள்ளி ஆசிரியர்

பெங்களூரு ராஜாஜி நகரில் வசித்து வருபவர் அமர் (வயது 55, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணம் ஆகாத இவர் தனது தாய் மற்றும் 2 சகோதரர்களுடன் வசித்து வருகிறார். அமர், அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அமருக்கும் அவருடைய வீட்டின் அருகே ‘ஜெராக்ஸ்‘ கடை நடத்தி வரும் ஹேமந்த் குமார் (34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 2014–ம் ஆண்டு அமரின் செல்போனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இந்த கோளாறை சரிசெய்ய அவர் தனது செல்போனை ஹேமந்த் குமாரிடம் கொடுத்தார். அப்போது, செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள் மூலம் அமர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உடையவர் என்பது ஹேமந்த் குமாருக்கு தெரியவந்தது.

ஓரினச்சேர்க்கையாளர்கள்

இதையடுத்து, அமரின் ஓரினச்சேர்க்கையை வீடியோ எடுத்து அதை காட்டி மிரட்டி பணம் பறிக்க ஹேமந்த் குமார் முடிவு செய்தார். அதன்படி ஹேமந்த் குமார், அமரிடம் ஓரினச்சேர்க்கை பற்றி பேசினார். மேலும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்து வருவதாகவும் அவர் கூறினார். இதை நம்பிய அமர், ஹேமந்த் குமாரின் சூழ்ச்சி தெரியாமல் அவருடைய வலையில் விழுந்தார்.

இதன் தொடர்ச்சியாக ஓரினச்சேர்க்கையாளர்கள் அருண், யூசுப் என்பவர்களை ஹேமந்த் குமார் தொடர்பு கொண்டார். அப்போது, அருண் அறிவுரைப்படி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் அமருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாக யூசுப் கூறினார். இதுபற்றி ஹேமந்த் குமார், அமரிடம் கூறியபோது யூசுப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க அவர் ஒப்பு கொண்டார். இதைத்தொடர்ந்து, பணம்–பொருட்கள் பறிக்கும் திட்டத்தை ஹேமந்த் குமார், அருண் மற்றும் யூசுப்பிடம் தெரிவித்தார். அவர்களும் அந்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

பணம்–பொருட்கள் பறிப்பு

இதையடுத்து, குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுக்கப்பட்டது. அங்கு அமரும், யூசுப்பும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த வேளையில், அந்த காட்சிகளை அமருக்கு தெரியாமல் யூசுப் ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்தார். பின்னர், சில நாட்களில் இந்த வீடியோ காட்சியை அருண் மற்றும் ஹேமந்த் குமாருக்கு, யூசுப் பகிர்ந்து வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, இந்த வீடியோ காட்சியை வெளியிடுவதாக கூறி அவர்கள் 3 பேரும் சேர்ந்து அமரை மிரட்டினார்கள். மேலும், வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம்–பொருட்கள் கொடுக்கும்படி அவர்கள் கூறினார்கள். இதற்கு அமர் ஒப்பு கொண்டதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சேர்ந்து அவரிடம் இருந்து பணம்–பொருட்களை பறித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த ஹேமந்த் குமாரின் நண்பர் மணியும், அமரை மிரட்டி பணம், பொருட்கள் பறித்துள்ளார்.

வாலிபர் கைது

இவர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் உள்பட ரூ.31 லட்சம் பொருட்களை அமரிடம் இருந்து பறித்துள்ளனர். இருப்பினும், தொடர்ந்து அவர்கள் 4 பேரும் அமரை குறிவைத்து மிரட்டி பணம், பொருட்கள் கேட்டு தொல்லை செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் மேற்கு மண்டல போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமந்த் குமாரை கைது செய்தனர். இவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அருண், யூசுப் மற்றும் மணி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்