மோடியின் பெயரை பயன்படுத்தி ஊழலை மறைக்க பாஜக முயற்சிக்கிறது: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
டெல்லி நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மோடியின் பெயரை பயன்படுத்தி ஊழலை மறைக்க பாஜக முயற்சிப்பதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் வரும் 23 ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. மூன்று நகராட்சிகளில் உள்ள 272 வார்டுகளுக்கு நடைபெறவுள்ள இந்த தேர்தலில் பாஜக ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால், நகராட்சிகளை கைப்பற்ற பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
கெஜ்ரிவால் தனது பேட்டியில் கூறியதாவது:- “ பாரதீய ஜனதா நரேந்திர மோடியை மட்டுமே நம்பியிருக்கிறது. பிரதமர் மோடியை பயன்படுத்தி ஊழலையும் சுகாதாரமின்மையையும் மறைக்க முயற்சிக்கிறது. நாட்டின் தலைநகர் டெல்லியில் நிலவும் தூய்மையின்மையால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. பாரதீய ஜனதா மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆம் ஆத்மி மீது மட்டுமே மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். டெல்லி நகராட்சியில் உள்ள நிலையை மோடி எவ்வாறு மேம்படுத்துவார். நகராட்சி பணிகளை மோடி மேற்கொள்ள போவது இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.