சிர்சாவில் தேரா தலைமையகத்தில் இருந்து 18 பெண்கள் மீட்பு
சிர்சாவில் பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் சிங்கின் தலைமை ஆசிரமத்தில் இருந்து 18 பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
சிர்சா,
இருபெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் சமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தேரா அமைப்பின் தலைமையகம் சிர்சாவில் 1000 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. தலைமை ஆசிரமத்தில் தான் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வன்முறையை அடுத்து, ராணுவம் குவிக்கப்பட்டதால் தலைமை ஆசிரமத்தில் இருந்து சாமியாரின் ஆதரவாளர்கள் வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலைமை ஆசிரமத்தில் இருந்து 18 பெண்களை மீட்டு உள்ளது என்றும் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளது என்றும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டு உள்ளது.
இன்னும் 3000 ஆதரவாளர்கள் ஆசிரமத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. தொடர்ந்து சாமியாரின் ஆதரவாளர்கள் வெளியேறும் நிலையும் காணப்படுகிறது. சாமியாரின் பிற ஆசிரமங்கள் சீல் வைக்கப்பட்ட நிலையில் தலைமையகத்திற்கு சீல் வைக்கும் திட்டமானது இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.