‘டுவிட்டர்’ பதிவு விவகாரம்: ராகுல்காந்தியை கிண்டல் செய்த பா.ஜனதா

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, சமூக வலைத்தளமான டுவிட்டரில் தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

Update: 2017-10-29 21:00 GMT

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, சமூக வலைத்தளமான டுவிட்டரில் தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். ஆனால் சிலர், ராகுல்காந்தி டுவிட்டரில் எந்த கருத்துகளையும் பதிவிடுவது (டுவிட்) இல்லை என்றும், அவருக்காக யாராவது பதிவிடுவார்கள் என்றும் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று ராகுல்காந்தி தனது டுவிட்டரில் ஒரு வீடியோவுடன் கருத்து பதிவிட்டு இருந்தார். அதில், ‘எனக்காக யார் ‘டுவிட்’ செய்கிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். நான் தெளிவாக சொல்கிறேன். இது தான் (நாய்) என்னோடு இருக்கிறது. நான் தான் ‘டுவிட்’ செய்கிறேன்’ என்று கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார். வீடியோவில் அவரது நாய் பிஸ்கெட் சாப்பிடும் காட்சி இடம் பெற்று இருந்தது.

இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க. தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா டுவிட்டரில், ‘ராகுலை விட அவரது நாய் அழகாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார். மேலும் ராகுல்காந்தி சைக்கிளில் தனது நாயுடன் செல்வது போன்ற படம் ஒன்றையும் அவர் பதிவிட்டு உள்ளார்.

இதேபோல் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த அசாம் மாநில முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர் ஹிமேந்தா பிஸ்வா சர்மா, ‘அசாமில் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்க உங்கள் வீட்டிற்கு வந்தபோது, நீங்கள் நாய்க்கு பிஸ்கெட் ஊட்டுவதில் தான் மும்முரமாக இருந்தீர்கள்’ என்று டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்