பிரான்சில் இந்திய சிறுவர்கள் 22 பேர் மாயம்: வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை
ரக்பி விளையாட்டு பயிற்சிக்கு என போலி டிராவல் ஏஜெண்ட்களால் பிரான்சு அழைத்துச்செல்லப்பட்ட 22 இந்திய மாணவர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #france #indianstudents
புதுடெல்லி,
ரக்பி விளையாட்டு பயிற்சி அளிப்பதாக கூறி மூன்று போலி டிரவல் ஏஜென்சிகளால் பிரான்சுக்கு அனுப்ப பட்ட 22 இந்திய பதின்ம வயது மாணவர்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ, இந்த விவகாரம் குறித்து விசாரணையை துவங்கியுள்ளது.
சிபிஐ தரப்பில் இது குறித்து கூறப்பட்டதாவது:-
டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 25 பேரை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கும் ரக்பி விளையாட்டு பயிற்சிக்கு அழைத்து செல்வதாக, அவர்களின் பெற்றோரை பரீதாபாத் மற்றும் டெல்லியில் உள்ள டிராவல் ஏஜென்ட்கள் அணுகினர். இதற்காக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமிருந்து ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளனர். தொடர்ந்து, 25 மாணவர்களும் பஞ்சாபை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் எனக்கூறி, பாரீஸ் அழைத்து சென்றனர்.
அங்கு ஒரு வாரம் பயிற்சி முகாமில் 25 மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஏஜென்ட்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த 2 பேர் அங்கிருந்து தப்பி இந்தியா திரும்பினர். இதனையடுத்து 23 மாணவர்களின் நாடு திரும்புவதற்கான டிக்கெட்டை ஏஜென்ட்கள் ரத்து செய்தனர். இதனால் செய்வதறியாது தவித்த மாணவர்கள் அங்கள்ள குருத்வாராவில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களை காணவில்லை. அவர்களில் ஒருவரை கைது செய்த பிரெஞ்ச் போலீசார், அது குறித்து இண்டர்போல் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ விசாரணையை துவங்கியுள்ளது. விரைவில் மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
#indianstudents #france