கர்நாடகா கவர்னருடன் எடியூரப்பா மீண்டும் சந்திப்பு: ஆட்சி அமைக்க அவகாசம் கோரி கவர்னரிடம் மீண்டும் கடிதம்
ஆட்சி அமைக்க அவகாசம் கோரி கவர்னரிடம் எடியூரப்பா மீண்டும் கடிதம் அளித்துள்ளார். #Yeddyurappa #KarnatakaElections2018
பெங்களூர்,
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜனதா 103 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முல்பாகல் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும், கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் கவர்னரை சந்தித்த பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள், தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்றுகாலை 10.30 மணிக்கு பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கர்நாடகா கவர்னருடன் எடியூரப்பா மீண்டும் சந்த்தார். அப்போது ஆட்சி அமைக்க அவகாசம் கோரி கவர்னரிடம் எடியூரப்பா மீண்டும் கடிதம் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், அனந்தகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர். ஆட்சி அமைக்க காங்கிரஸ், ஜே.டி.எஸ். தீவிரம் காட்டி வரும் நிலையில் ஆட்சி கட்டிலில் அமர பாஜக மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.