பெரும்பான்மையை நிரூக்க 15 நாள் அவகாசம் எல்லாம் எனக்கு தேவையில்லை - எடியூரப்பா பேட்டி
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூக்க 15 நாள் அவகாசம் எல்லாம் எனக்கு தேவையில்லை என எடியூரப்பா கூறிஉள்ளார். #BSYedyurappa
பெங்களூரு,
கர்நாடகாவில் யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை, இருப்பினும் எடியூரப்பா கர்நாடகத்தின் முதல்–மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். மாலை பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.
எடியூரப்பா பேசுகையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். அதனால் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். நான் முதல்–மந்திரியாக பதவி ஏற்றேன். பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். அத்தனை நாட்கள் நாம் காத்திருக்க தேவை இல்லை. சட்டசபையில் அடுத்த சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம்.
இதில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் பா.ஜனதாவை ஆதரித்து உள்ளனர். ஆனால் அதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் நடந்து கொள்கின்றன. புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அந்த கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். ஆயினும் அந்த கட்சி திருந்துவதாக தெரியவில்லை. காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்கிவிட்டோம். அடுத்து காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம். யார் என்ன முயற்சி செய்தாலும், நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். 5 ஆண்டுகள் ஆட்சி நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்துவோம் என கூறிஉள்ளார்.