டெல்லியில் ஜனாதிபதி மாளிகை குடியிருப்பில் ஊழியர் பிணம்: போலீஸ் விசாரணை
டெல்லி ஜனாதிபதி மாளிகை குடியிருப்பில் ஊழியர் பிணத்தைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு ஜனாதிபதி மாளிகையின் வளாகத்துக்கு உள்ளேயே குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, அந்த வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் பிணம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனை தொடர்ந்து போலீசார் அந்த உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், வீட்டில் பிணமாக கிடந்த அந்த நபர் ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர் என்பதும், அவர் இறந்து 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது.
அவருடைய இறப்புக்கான காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.