ஓ.எல்.எக்ஸில் கேரள காங்கிரஸ் அலுவலகம் விற்பனை

ஓ.எல்.எக்ஸில் கேரள காங்கிரஸ் அலுவலகம் விற்பனை வந்துள்ளது. #KeralaCongress

Update: 2018-06-10 11:28 GMT
திருவனந்தபுரம்,

காங்கிரஸ் கட்சியின் கேரளா அலுவலகம் ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இது அந்த கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிகாலம் வரும் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து வரும் 21-ந் தேதி ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளது. கேரளத்தில் ஆளும் சி.பி.எம். கூட்டணிக்கு 2 சீட்டுகளும், எதிர்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு சீட்டும் கிடைக்கும். சி.பி.எம். கூட்டணி சார்பில் இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

காங்கிரஸ் சார்பில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ்-எம் கட்சியை சேர்ந்த ஜோஸ்.கே.மாணிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கட்சி உடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் கேரளா அலுவலகம் ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. காங்கிரஸ் தலைமை மீதுள்ள கோபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில காங்கிரஸ் அலுவலகமான இந்திரா பவன் விற்பனைக்கு என அனீஸ் என்பவர் ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார். விலை ரூ.10,000 என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விருப்பமுள்ள கட்சிகள் முஸ்லீம் லீக் அல்லது கேரள காங்கிரஸ் கட்சியை தொடர்புகொள்ளுமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.  இந்த இரண்டு கட்சிகளும், கேரளா காங்கிரஸ் (எம்) க்கு மிகவும் நெருக்கமாக கட்சியாகும். அதனால் அப்படி விளம்பரம் கொடுத்து கிண்டல் செய்துள்ளார்.  ராஜ்யசபா சீட் கூட்டணி கட்சிக்கு கொடுக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகம் விற்பனைக்கு என விளம்பரம் வந்திருப்பதால் அங்கு  பரபரப்பு நிலவுகிறது.

மேலும் செய்திகள்