பெங்களூரு: ஜெயநகர் தொகுதியில் 55 சதவீத வாக்குகள் பதிவு
ஜெயநகர் சட்டப்பேரவை தொகுதியில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவுற்றது. #JayanagarElection
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் தேவே கவுடா அறிவித்திருந்தார். இதனால் அந்த தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் ஜெயநகர் தொகுதியில் மொத்தமுள்ள 216 தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 55 சதவீத வாக்குகள் பதிவாகிருந்தன. இதனிடையே நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.