ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது நாளை அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிக்கை தாக்கல்
ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது நாளை அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது. #AircelMaxiscase #KartiChidambaram
புதுடெல்லி,
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை முடக்கியும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. வழக்கு தொடர்பாக சிபிஐயும், அமலாக்கப்பிரிவும் தீவிரமாக விசாரித்து வருகிறது. இப்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது நாளை அமலாக்கப்பிரிவு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்கிறது.