இந்தியாவில் அவசரநிலை ஓர் இருண்ட காலம்; பிரதமர் மோடி தொண்டர்கள் முன் பேச்சு

இந்தியாவில் அவசரநிலை ஓர் இருண்ட காலம் என்றும் அச்சம் நிறைந்த சூழ்நிலை அப்பொழுது உருவாகி இருந்தது என்றும் பிரதமர் மோடி இன்று மும்பையில் பேசியுள்ளார். #PMModi

Update: 2018-06-26 08:21 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 43 வருடங்களுக்கு முன் அதிகாரத்தில் இருந்தபொழுது அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்.  இந்த நிலையில், பிரதமர் மோடி மும்பையில் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களின் முன் இன்று உரையாற்றினார்.  அதில் அவர் பேசும்பொழுது, காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வதற்காக கருப்பு தினத்தினை (அவசரநிலை) நாம் கடைப்பிடிக்கவில்லை.

இன்றைய இளைஞர்கள் என்ன நடந்தது என்பதனை பற்றி அறிந்து கொள்ள செய்யவே நாங்கள் விரும்புகிறோம்.  ஒரு குடும்பத்தின் அதிகார இச்சைக்காக மற்றும் அடிமைத்தனத்திற்காக இந்தியா ஒரு பெரிய சிறைச்சாலையாக உருவாகும் என நாட்டில் எவரும் நினைத்ததில்லை.  ஒவ்வொருவரும் அச்சத்தில் வாழ்ந்தனர்.  அரசியலமைப்பு தவறாக பயன்படுத்தப்பட்டது.

அவசரநிலையில் நடந்தது பற்றி இளைஞர்களுக்கு எந்தவொரு விசயமும் இன்று தெரிவதில்லை.  சுதந்திரம் இன்றி எப்படி வாழ்வது என்பது பற்றி அவர்களுக்கு தெரியாது.

இன்று அவர்களுக்கு (காங்கிரஸ்காரர்களுக்கு) எதிராக நீதிமன்றங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அவர்கள் கற்பனை கூட செய்திருக்க வாய்ப்பில்லை.  அதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நீதியமைப்பினை அச்சுறுத்த முயற்சிக்கிறார்கள்.  அவர்களின் மனநிலை அவசரநிலையில் இருந்தது போன்று உள்ளது என கூறியுள்ளார்.

அரசியலமைப்பினை சேதப்படுத்தியவர்கள், நாட்டின் ஜனநாயகத்தினை சிறைப்படுத்தியவர்கள் இன்று மோடி அரசியலமைப்பில் தலையிடுகிறார் என்ற அச்சத்தினை பரப்பி வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்