காஷ்மீரில் போலீஸ்காரர் கடத்தி கொலை

காஷ்மீரில் போலீஸ்காரர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-07-07 00:15 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட வெகில் கிராமத்தை சேர்ந்தவர் ஜாவித் அகமது தார் (வயது 27). போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர், நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சில பயங்கரவாதிகள், ஜாவித்தை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் ஜாவித் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், நேற்று அவரது உடல் மட்டுமே கிடைத்தது. ஜாவித்தை கடத்திச்சென்ற பயங்கரவாதிகள், அவரை கொலை செய்து உடலை வீசிச்சென்றதாக தெரிகிறது.

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த 3-வது கடத்தல் சம்பவம் இதுவாகும். அந்தவகையில் கடந்த மாதம் 14-ந் தேதி அவுரங்கசீப் என்ற போலீஸ்காரரை கடத்திக்கொலை செய்த பயங்கரவாதிகள், பின்னர் சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த வீரர் ஒருவரை கடத்திச்சென்று பின்னர் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்