பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு: போலீசார் துப்பாக்கிச்சூட்டில் சிறுமி உள்பட 3 பேர் சாவு, காஷ்மீரில் கடும் பதற்றம்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பொதுமக்கள் கற்களை வீசி தாக்கியதால் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2018-07-07 23:15 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீரின் குலகாம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹவூரா ரெட்வானி கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்று பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்த தகவல் அறிந்ததும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய அவர்கள், வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல், வன்முறையை தொடர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினருடன் பொதுமக்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருவதாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே வதந்தி பரவுவதை தடுக்கும் நோக்கில் குல்காம் மாவட்டத்தில் இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்