ஓரினச்சேர்க்கை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்-மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி கோரிய மனு மீது தீர்மானிக்கும் முடிவை உச்ச நீதிமன்றத்திடமே விட்டுவிடுகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. #SupremeCourt

Update: 2018-07-11 10:45 GMT
புதுடெல்லி,

ஓரினச்சேர்க்கையாளர்கள் பாலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என கடந்த 2009ஆம் ஆண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை 2013 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால், அது குறித்த விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 பிரிவு, நீக்குவது பற்றிய விசாரணையை துவங்கியது.

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் சட்டப்பிரிவை நீக்க கோரிய மனுவுக்கு எதிராக பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்போவது இல்லை என்றும், இந்த வழக்கை பொறுத்தவரை, உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

மேலும் செய்திகள்