11 பேர் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் பேய் நடமாட்டம்? மக்கள் பீதி

11 பேர் மரணித்த வீட்டருகில் உள்ள வீடுகளில் ஆவி பயம் காரணமாக புஜைகள் செய்யப்படுவதாகவும், அங்குள்ள வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. #Burarideaths

Update: 2018-07-13 05:09 GMT
புதுடெல்லி

டெல்லியில்  புராரி பகுதியில் கடந்த 1-ஆம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சொர்க்கத்தை அடைய போவதாக கூறி மூடநம்பிக்கை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.இந்த சம்பவம் நடந்து 12 நாள் ஆகிவிட்ட நிலையிலும் அந்த பகுதியை சுற்றியுள்ள மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள்.

இது குறித்து அங்கு வசிக்கும் ரியல் எஸ்டேட் டீலர் பவன்குமார் கூறுகையில், எங்கள் வீடு 11 பேர் இறந்த வீட்டின் பின்பக்கத்தில் உள்ளது.இதன் காரணமாக என் பிள்ளைகள் பயத்தில் உள்ளதால் சிறப்பு பூஜை செய்யவுள்ளோம்.இது மூடநம்பிக்கை கிடையாது, இதை செய்யவேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.

இறந்தவர்கள் வீட்டை சுற்றியுள்ள இடங்களின் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது.அமானுஷ்ய சக்திகள், ஆவிகள் அலைவதாக செய்திகள் பரவி வருவதால் இங்கு குடிவரவோ அல்லது இடத்தை வாங்கவோ யாரும் முன்வரவில்லை.

 இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த லலித்தின் மூத்த சகோதரர் தினேஷ் கூறுகையில், நான் இந்த வீட்டில் சில நாட்கள் தங்கவுள்ளேன்.போலீஸ் விசாரணை முடிந்தபின்னர் வரவுள்ளேன் என கூறியுள்ளார்.தினேஷின் சகோதரர் மகன் கேட்டன் நாக்பால் கூறுகையில், சம்பவம் நடந்த வீட்டில் பூஜைகள் செய்து குருக்களுக்கு விருந்து அளித்துவிட்டு அங்கு சென்று சில நாட்கள் தங்கவுள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்