கற்பழிப்பு புகார் அளிக்க பை ஒன்றில் கருவுடன் காவல் நிலையத்திற்கு சென்ற இளம்பெண்
உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பை ஒன்றில் கருவுடன் கற்பழிப்பு புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்ற அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
அம்ரோஹா,
உத்தர பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் ஹசன்பூர் கொட்வாலி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் தனது தாயுடன் ஹசன்பூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் மனோஜ் (வயது 22) என்ற வாலிபர் தன்னை 5 மாதங்களுக்கு முன் துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்து விட்டார் என தெரிவித்து உள்ளார். தொடர்ந்து, அவர் கொண்டு சென்றிருந்த பை ஒன்றையும் காவலர்களிடம் காண்பித்துள்ளார். அதற்குள் கரு ஒன்று இருந்துள்ளது. தன்னை கட்டாயப்படுத்தி அந்நபர் கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார் என இளம்பெண் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய மனோஜை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கருவை பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
இளம்பெண் ஒருவர் கருவுடன் காவல் நிலையத்திற்கு சென்று கற்பழிப்பு புகார் அளித்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.