மராட்டியத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தி இரங்கல்
மராட்டியத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து குறித்து தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் ராய்கட்டில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேளாண் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 30 பேர் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
தபோலி வேளாண் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 35 பேர் மஹாபலேஸ்வர் பகுதிக்கு இன்று காலை சுற்றுலா சென்றுள்ளனர். ரெய்காட் மஹாபலேஷ்வர்-போலந்பூர் சாலையில் பேருந்து மலையிலிருந்து இறங்கியது.
அப்போது அம்பெனாலி பகுதியில் பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. சுமார் 500 அடி ஆழத்தில் பேருந்து விழுந்து சுக்குநூறானது. இதில் பேருந்தில் இருந்த சுமார் 33 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்த ஒருவர் பெரும் போராட்டத்திற்கு இடையே மேலே வந்து தகவல் தெரிவித்த பின்பே பேருந்து விபத்தில் சிக்கியது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 10 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்திற்கு மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவீஸ், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள தேவேந்திர பட்னாவீஸ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்ய தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மராட்டியத்தில் உள்ள ரெய்காட் பகுதியில் பேருந்து விபத்து குறித்து அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு உரிய தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள்விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.