வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை

வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை இன்று மும்பையில் நடக்கிறது.

Update: 2018-07-29 23:05 GMT

மும்பை,

இந்தியாவில் உள்ள பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்திய வங்கிகள் சங்கம் சம்பள நிர்ணயம் செய்கிறது.

வங்கி ஊழியர்களின் 2–ம் கட்டத்துக்குரிய சம்பளத்தை நிர்ணயிக்க பேச்சுவார்த்தை கடந்த மே மாதம் 5–ந்தேதி நடத்தப்பட்டது. ஆனால் வங்கிகள் சங்கம் 2 சதவீத அளவிற்கே ஊதிய உயர்வு அளிக்க முடியும் என்று கூறியது. இதனால் அதிருப்தி அடைந்த வங்கி ஊழியர்கள் மே மாத இறுதியில் நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கம், அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினரும் இன்று (திங்கட்கிழமை) மும்பையில் மீண்டும் சந்தித்து சம்பள உயர்வு தொடர்பாக விவாதிக்கின்றனர்.

இதுபற்றி ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் மராட்டிய மாநில அமைப்பாளர் தேவிதாஸ் கூறுகையில், ‘‘எங்களது கோரிக்கை 25 சதவீத ஊதிய உயர்வு. என்றபோதிலும் எங்கள் நிலையில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கிறோம். இதுவரை சம்பள உயர்வு இரட்டை இலக்க சதவீதத்தில்தான் வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கையில் வங்கிகள் நிர்வாகம் 2 சதவீதம்தான் தர முடியும் என்று கூறுவதை ஏற்க இயலாது’’ என்றார்.

மேலும் செய்திகள்